Friday, September 10, 2021

மஹாகவி சுப்ரமணிய பாரதி - Mahakavi Subramanya Bharathi




“Nation Bharath is a grand old country, you are its progeny, Forget not”

-       Mahakavi Subramanya Bharathi

 


பாரதி சுயசரிதை
------------------------
சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறந்து விட்டேன்;
நான் புதியவன்,நான் கடவுள்,நலிவி லாதோன்'
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்;பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்.
34
குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய்.
35
கேளப்பா!மேற்சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்;
தோளைப் பார்த் துக்களித்தல் போலே யன்னான்
துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே;
வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும்
மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க!

http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=145&pno=151


ஆத்ம ஜெயம்

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
         கவர்ந்திட மாட்டாவோ? - அட,
மண்ணில் தெரியுது வானம், அதுநம்
         வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
         கிறுதியிற் சோர்வோமோ? - அட,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
         மேவு பராசக்தியே.          1

என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
         எத்தனை மேன்மைகளோ -
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
         சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
         முற்று முணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
          தாழ்வுற்று நிற்போமோ?          2


கண்ணன்- என் தந்தை

வேதங்கள் கோத்து வைத்தான் -அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;
வேதங்க ளென்று புவியோர்- சொல்லும்
வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;
வேதங்க ளென்றவற் றுள்ளே - அவன்
வேதத்திற் சிலசில கலந்ததுண்டு
வேதங்க ளன்றி யொன்றில்லை - இந்த
மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம். 7

நாலு குலங்கள் அமைத்தான்; - அதை
நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்,
சீலம் அறிவு கருமம் - இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;
மேலவர் கீழவரென்றே - வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்
போலிச் சுவடியை யெல்லாம் - இன்று
பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான். 8

வயது முதிர்ந்து விடினும் - எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை
துயரில்லை; மூப்பு மில்லை - என்றும்
சோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை;
பயமில்லை, பரிவொன்றில்லை, - எவர்
பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை
நயமிகத் தெரிந்தவன் காண்; - தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்பான். 9

துன்பத்தில் நொந்து வருவோர் - தம்மைத்
தூவென் றிகழ்ந்து சொல்லி அன்பு கனிவான்;
அன்பினைக் கைக் கொள் என்பான்; - துன்பம்
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்
என்புடை பட்ட பொழுதும் - நெஞ்சில்
ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான;
இன்பத்தை எண்ணு பவர்க்கே - என்றும்
இன்பமிகத் தருவதில் இன்ப முடையான். 10


கண்ணன்- எனது சற்குரு


சந்திரன் சோதி யுடையதாம் - அது
        சத்திய நித்திய வஸ்துவாம்; - அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் - நினைச்
        சேர்ந்து தழுவி அருள்செயும்; - அதன்
மந்திரத் தாலிவ் வுலகெலாம் - வந்த
        மாயக் களிப்பெருங் கூத்துக் காண் - இதைச்
சந்ததம் பொய்யென் றுரைத்திடும் - மடச்
        சாத்திரம் பொய் யென்று தள்ளடா! 7

"ஆதித் தனிப்பொரு ளாகுமோர்; - கடல்
        ஆருங் குமிழி உயிர்களாம், - அந்தச்
சோதி யறிவென்னும் ஞாயிறு - தன்னைச்
        சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; - இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே - அதன்
        மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்; - வண்ண
நீதி யறிந்தின்பம் எய்தியே - ஒரு
        நேர்மைத் தொழிலில் இயங்குவார்; 8


"சித்தத்தி லேசிவம் நாடுவார்; - இங்கு
        சேர்ந்து களித்துல காளுவார்; - நல்ல
மத்த மதவெங் களிறுபோல் - நடை
        வாய்ந்திறு மாந்து திரிகுவார்; - இங்கு
நித்தம் நிகழ்வ தனைத்துமே - எந்தை
        நீண்ட திருவரு ளால்வரும் - இன்பம்
சுத்த சுகந்தனி யாநத்தம் - எனச்
        சூழ்ந்து கவலைகள் தள்ளியே. 9


"சோதி அறிவில் விளங்கவும் - உயர்
        சூழ்ச்சி மதியில் விளங்கவும் -அற
நீதி முறைவழு வாமலே - எந்த
        நேரமும் பூமித் தொழில் செய்து -கலை
ஓதிப் பொருளியல் கண்டுதாம் - பிறர்
        உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே -இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் - பெண்மை
        மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில், 10


ஆடுதல், பாடுதல். சித்திரம் - கவி
        யாதி யினைய கலைகளில் - உள்ளம்
ஈடுபட் டென்றும் நடப்பவர் - பிறர்
        ஈன நிலைகண்டு துள்ளுவார் - அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் - சில
        நாளினில் எய்தப் பெறுகுவார் - அவர்
காடு புதரில் வளரினும் - தெய்வக்
        காவனம் என்றதைப் போற்றலாம். 11


"ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த
        ஞானம் விரைவினில் எய்துவாய்" - எனத்
தேனி லினிய குரலிலே - கண்ணன்
        செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டை
ஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன்
        ஏகி மறைந்தது கண்டிலேன்; - அறி
வான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன்
        ஆட லுலகென நான் கண்டேன்! 12


கண்ணம்மா எனது குலதெய்வம்

ராகம் - புன்னாகவராளி


பல்லவி

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

சரணங்கள்

1. பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்னை)

2. மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமைபுகுந்தன, கொன்றவைபோக் கென்று (நின்னை)

3. தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம் (நின்னை)

4. துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட (நின்னை)

5. நல்லது தீயது நாமறியோம்! அன்னை
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! (நின்னை)




இளைய பார தத்தினாய் வா வா வா
எதிரி லாவ லத்தினாய் வா வா வா
ஒளி யிழந்த நாட்டிலே - நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே - முன்போலே
கலைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் - பார்த்தன்போல்
விழியி னால்வி ளக்குவாய் வா வா வா      

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழும சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற்றுவாய் வா வா வா
ஒற்று மைக்கு ளுய்யவே - நாடெல்லாம்
ஒருபெ ருஞ்செயல் செய்வாய் வா வா வா  

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
        மாயையே - சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
        சாட்சியை - மாயையே.         6

என்னிச்சை கொண்டுனௌ யெற்றிவிட
        வல்லேன் மாயையே-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
        வராது காண்- மாயையே.         7

யார்க்கும் குடியல்லேன் யானென்ப
        தேர்ந்தனன் மாயையே - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்கு வேன்
        உன்னை - மாயையே. 


 அறிவே தெய்வம்

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் - பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுன்
டாமெனல் கேளீரோ? 1

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் - எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ? 2

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? - பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ? 3

வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே. 4

நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே. 5

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே - உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே. 6

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம் - நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ? 7

உள்ள தனைத்திலும் முள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே - இங்குக்
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ? 8

மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப் - பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ? 9

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம் - என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே. 10

நந்தலாலா


காக்கச் சிறகினிலே
நந்தலாலா -- நின்றன்
கரியநிறந் தோன்றுதயே
நந்தலாலா;                        1

பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா -- நின்றன்
பச்சைநிறந் தோன்றுதயே
நந்தலாலா;                        2


கேட்கு மொலியிலெல்லாம்
நந்தலாலா -- நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா;                        3

தீக்குள் விரலவத்தால்
நந்தலாலா -- நின்னத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
நந்தலாலா.        


சூர்ய ஸ்தோமம் -- ஞானபாநு

திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல் லறிவு, வீரம்,
மருவுபல் கலையின் சோதி, வல்லமை யென்ப வெல்லாம்
வருவது ஞானத் தாலே வையக முழுதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு. 1

கவலைகள் சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்,
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,
இவையெலாம் அறிவிலாமை என்பதோர் இருளிற் பேயாம்.
நவமுறு ஞான பாநு நண்ணுக; தொலைக பேய்கள். 2

அனைத்தையும் தேவர்க்காக்கி, அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்;
தினத்தொளி ஞானங் கண்டீர்; இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடி வாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம். 3

பண்ணிய முயற்சி யெல்லாம் பயனுற வோங்கும் ஆங்கே
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்;
திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தி னோடும்
நண்ணிடும் ஞான பாநு அதனை நாம் நன்கு போற்றின். 4

தெளிவு

எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
          ஏழைமை யுண்டோடா? - மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்
          புத்தி மயக்க முண்டோ?           1

உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
          உள்ளங் குலைவ துண்டோ? - மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
          வேதனை யுண்டோடா?           2

சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
          செய்கையுந் தேர்ந்துவிட்டால், - மனமே,
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
           எண்ணஞ் சிறிது முண்டோ?           3


பகைவனுக் கருள்வாய்

பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே
பகைவனுக் கருள்வாய்.

புகைநடுவினில் தீயிருப்பதைப்
      பூமியிற் கண்டோமே - நன்னெஞ்சே
      பூமியிற் கண்டோமே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
      பரமன் வாழ்கின்றான் நன்னெஞ்சே
      பரமன் வாழ்கின்றான்.                                                          (பகைவனுக்)               1

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
      செய்தி யறியாயோ - நன்னெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
      கொடி வளராதோ? - நன்னெஞ்சே                                   (பகைவனுக்)               2

உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
      உள்ளம் நிறைவாமோ? - நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
      சேர்த்தபின் தேனாமோ? - நன்னெஞ்சே                        (பகைவனுக்)               3

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
      வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழி வானென்
      சாத்திரங் கேளாயோ? - நன்னெஞ்சே                             (பகைவனுக்)               4

போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
      போலுவந் தானுமவன் - நன்னெஞ்சே
நேருக் கருச்சுனன் தோிற் கசைகொண்டு
      நின்றதுங் கண்ண னன்றோ? - நன்னெஞ்சே               (பகைவனுக்)               5

தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
      சிந்தையிற் போற்றிடுவாய் - நன்னெஞ்சே
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
      அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே                        (பகைவனுக்)               6







http://www.keetru.com/rebel/bharathi/index.php

http://www.tamilvu.org/library/l9100/html/l9100ba1.htm

http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=145&pno=151

http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=145&pno=16


No comments: